March 3, 2017

பன்றியும் மனிதனும் இணைந்த புதுமையான உயிரினம்

பெண் பன்றியின் கருமுட்டைக்குள் மனித மரபணுக்களைச் செலுத்திய பின், அதை மீண்டும் பன்றியின் கருப்பையிலேயே வைத்து வெற்றிகரமாக வளரச் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நான்கு வார கால வளர்ச்சியின் பின் இதயம், கல்லீரல் மற்றும் நியூரோன்கள் என்பன அதில் உருவாகியிருக்கின்றன. மேலும் பன்றியின் அமைப்பைக் கொண்ட சிறு உடலும் உருவாகியிருக்கிறது.
மனிதனும் பன்றியும் இணைந்த இந்தக் கருச்சினைக்கு ‘கிமேரா’ (Chimera) என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். கிமேரா என்பது கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்படும் சிங்க முகமும் ஆட்டின் உடலும் பாம்பின் வாலும் கொண்ட ஒரு உயிரினம். கலப்பு உயிரினங்களை பொதுவாக இந்தப் பெயரைக் கொண்டே அழைப்பர். அதன்படி, மனிதன்-பன்றி கலந்த இந்த உயிரினத்துக்கும் அதே பெயரைச் சூட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் மனிதனுக்குத் தேவையான உடலுறுப்புக்களை பிற உயிரினங்களிடம் வளர்த்து எடுக்க முடியுமா என்பதைக் கண்டறியும் நோக்குடனேயே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் உடையதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த அபூர்வ கலப்பினத்தை தொடர்ந்து வளர்க்கப்போகிறார்களா, முழுமையாக வளருமா என்பன பற்றி அவர்கள் எதுவித விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

0 comments:

Post a Comment