April 22, 2014

பூகம்ப அளவுகள்- Earthquake Measurements



ரிச்டர் ஸ்கேல்

ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கில் நில அதிர்வுகள் ஏற்படுவதாக கருவிகள் மூலம் அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் மிகச் சிறிய அதிர்வுகளாக இருப்பதால் நம்மால் அறிய முடிவதில்லை. நில அதிர்வுகள் 'ரிச்டர் அளவை' என்ற அளவினால் அளக்கப்படுகிறது.

நில அதிர்வுகளை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் 1000த்திற்கு மேற்பட்ட சீஸ்மோகிராஃப் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்படும் போது பல்வேறு நிலையங்களில் பதிவான அளவுகளைக் கொண்டு அந்த பூகம்பத்தின் எபிசெண்டர் (epicenter) எங்கு உள்ளது என்பதையும், பூகம்பத்தின் அளவையும் கணிப்பார்கள்.

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் 'சார்லஸ் ரிச்டர்' 1935ம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஒரு யூனிட் அதற்கு முந்தைய யூனிட் அளவை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையருக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிச்டர் ஸ்கேலில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.


ரிச்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ பூகம்பம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிச்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பூகம்பம் நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிச்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் பூகம்பம் அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு பூகம்பம் ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.


எபிசெண்டர், போகஸ் என்றால் என்ன?

பூமிக்குள் எந்த இடத்தில் பாறைப் படிமங்களின் உரசல் ஏற்பட்டதால் பூகம்பம் உண்டானதோ அது போகஸ் (Focus) எனப்படும். அந்த இடத்திற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேற்பரப்பு எபிசெண்டர் (Epicenter) என்று அழைக்கப்படும்.

ஒரு பூகம்பத்தின் போகஸ் தரையிலிருந்து 70 கி.மீ. ஆழத்திற்குள் இருந்தால் அதனை ஷாலோ போகஸ் (Shallow focus) என்பார்கள். இதனால் பூமியின் பரப்பில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். 70 கி.மீ.க்கு மேல் 700 கி.மீ ஆழத்திற்குள் பூகம்பம் உருவானால் ஆழமான போகஸ் (Deep focus) என்று கருதப்படும்.

பூகம்ப மையத்தை கண்டுபிடித்தல்:

குறைந்தது மூன்று சீஸ்மோகிராஃப் நிலையங்களில் பதிவான தகவல்களைக் கொண்டு பூகம்ப மையத்தை கண்டுபிடிக்கப்படும். கணிப்பின் துல்லியம் எபிசெண்டருக்கு 10கி.மீ. அளவிற்குள்ளும், பூமியின் அடியில் உள்ள போகஸ் 10 - 20 கி.மீ அளவிற்குள்ளும் அறியப்படுகிறது.

பூகம்பங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பு சீஸ்மோகிராஃப் நிலையங்களால் பூகம்ப மையத்தை மேலும் துல்லியமாக கணிக்க இயலும்.

நன்றி http://www.kalanjiam.com/

0 comments:

Post a Comment